சிறப்புத் தகுதி பறிக்கப்பட்ட காஷ்மீரில் நிலவுவது அமைதி அல்ல, அச்சம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமி தெரிவித்தார்.
கோழிக்கோட்டில் அரசமைப்புப் பாதுகாப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நாம் மக்கள்’ (வி தி பீப்பிள்) என்கிற விவா தத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கத்தின் ஊதுகுழலாகச் செயல் படும் சில ஊடகங்களால் பிரச்சாரம் செய்யப்படுவதில்லை காஷ்மீர். சிறப்புத் தகுதிநிலை நீக்கப்பட்டதற்கு மக்கள் மத்தியில் தீராத எதிர்ப்பு கிளம்பியுள்ளது. யுஏபிஏ உட்பட குற்றச்சாட்டுகள், கைதுகள் போன்ற அச்சுறுத்தல் மூலம் போராட்டக் காரர்களை அரசாங்கம் அமைதிப்படுத்துகிறது. மக்களிடம் கருத்து கேட்காமல், விவாதிக்காமல் சிறப்புத் தகுதி பறிக்கப்பட்டது. அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எல்லா சுதந்திரமும் பறிபோனது.
வேலை வாய்ப்பு, நலத்திட்டங்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்கள் மனதில் பாஜகவுக்கு எதிர்ப்பு உள்ளது. ஜனநாயக அமைப்பின் மீதான மோடியின் தாக்குதல் காஷ்மீரில் குறையாமல் தொடர்கிறது. அந்த நிலை நாளை எங்கு வேண்டுமானாலும் திரும்பலாம். மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் செயல் முறை சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.